Skip to main content

Posts

Showing posts with the label அனுபவம்

தாழ்வாரத்து நிழல்

           மாமரத்து கிளைகளும், இலைகளும் தாழ்வாரத்து  நிழலுடன் பொறுமையாக நகர்ந்து அமைதியாக  தங்களுடைய  இருப்பிடத்தை ஆக்கிரமித்து கொண்டிருந்தன. நிழல்கள் சில சமயங்களில் தாவி வரும் முயல்களை போல நிலத்தை ஆக்கிரமிக்கின்றன. சில சமயங்களில் மெதுவாக  நகரும் ஆமைகளை போல. சில சமயங்களில் காலை மிருதுவாக வருடி கொடுக்கும் வாய்க்கால்  நீரின்  சிற்றலைகள் போல.மற்றும் சில சமயங்களில் அசை போடும் மாட்டை போல.  கோலம் போட்டிருக்கும் போது விழும் நிழல், ஆற்றில் சிறு பாறைகளின் மீது கால் வைத்து நடக்கும் இளம் பெண்களை போல சிலிர்ப்புடனும், சிரிப்புடனும் நகர்கின்றன.பூஜைக்கான பித்தளை சாமான்களை கழுவி கவிழ்த்திருக்கும் போது அதில் முகம் காட்டி  அழகு பார்த்துக் கொள்கின்றன.  விக்னேஷ்வர்  செய்தித்தாள்  படிக்கும் போது   தாழ்வாரத்து நிழலும் உடன் படிக்கிறது. அப்போது அவை இருக்கின்றனவா இல்லையா எனும் படி அவருடன்  ஒன்று கலந்து விடுகின்றன.நான் துணி காய போடும் போது கண்ணாமூச்சி விளையாடுகின்றன நிழல்கள் .  நாங்கள் இருவரும் அமர்ந்து ...

டேபிள் டென்னிஸ் டோர்னமென்ட்....

  டேபிள் டென்னிஸ் விளையாட்டு போட்டி என்று என் கணவர் கூறியதும் நாம் செல்லலாம் என்றேன் நான். சென்னைக்கு மாற்றலாகி வந்து ஆறு மாதங்கள் ஆகின்றன. அலுவலகம் சார்ந்த அமைப்புகளில் பங்கேற்பது இதுவே முதல் முறை. அண்ணா நகரில் இருக்கும் SBOA பள்ளிக்கு செல்வதற்கே எங்களுக்கு நாற்பத்தைந்து நிமிடம் ஆகும். இருந்தாலும் சென்று தான் பார்ப்போம் என சென்றோம். காலை 7 மணிக்கு SBOA பள்ளிக்கு சென்றால் , விளையாட்டு போட்டிகள் SBOA மெட்ரிக்குலேசன் பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளது என செக்யூரிட்டி கூறினார். அதுவும் ஒரு ஐந்து நிமிட பயணம் தான்.  SBOA மெட்ரிக்குலேசன் என் கணவருக்கு மனதளவில் நெருக்கமான வளாகம். அங்கே தான் அவர் பதினொன்று , பனிரெண்டாம் வகுப்பு படித்தார். கிரவுண்டில் காரை பார்க் செய்துவிட்டு சுற்றிப் பார்த்தார். மனோ , இந்த கிரவுண்ட் எவ்ளோ பெரிசா இருக்கும் தெரியுமா ? இப்போ எப்படி இவ்ளோ குட்டியா இருக்கு ? வேற ஏதாச்சும் பில்டிங் கட்டிட்டாங்களோ ? என அந்த குட்டி கிரவுண்டை மூன்று முறை சுற்றி வந்தார். எனக்கு சிரிப்பாக வந்ததது. ஏங்க , அப்போ நீங்க சின்ன பையனா இருந்திருப்பீங்க அதனால் உங்களுக்கு இதே கிரவுண்ட் ரொம்ப பெர...

ஐஐடி மாராத்தான் .....

மாராத்தான் உண்மையில் எப்படித்தான் இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆசை இருந்தது. நேற்றிரவு தான் 5கிமீ மாரத்தான் ஐஐடி மெட்ராஸில் நடப்பதை அறிந்து கொண்டோம். காலை ஐந்தரை மணியளவில் அங்கே இருக்க வேண்டும். நாங்கள் இருக்குமிடத்தில் இருந்து பத்து நிமிடம் தான் . ஆனால் நாங்கள் நான்கு மணிக்கே எழுந்து கொண்டோம். ஐந்து மணி ஆகும் போது காரில் பயணத்தை துவக்கினோம்‌ . வீட்டைத் தாண்டியதும் மழை பெய்ய ஆரம்பித்தது. மழையில் கூட ரன்னிங் செல்பவர்கள் குறைவான வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தனர். அடையார் ஆற்றங்கரையை கடக்கும் போது சாக்கடை நாற்றம் எடுத்தது. பகல் பொழுதுகளில் கடக்கும் போது வாகனங்களின் புகை , ஹார்ன் சத்தங்கள், ஆட்டோக்களின் இரைச்சலினாலும் சாக்கடை நாற்றம் அமுங்கி போகிறது. ஒருவேளை வெறிச்சோடியிருந்த அடையார் ஆற்றங்கரை பாலமும் ,  அதிகாலையும் ,  தூறல் மழையும் , சாக்கடை நாற்றத்தை தூண்டியிருக்கலாம் அல்லது எங்களின் கவனத்திற்கு வந்ததிற்கு இவையெல்லாம் காரணமாக இருக்கலாம்.  ஐஐடிக்குள் நுழையும் போது செக்யூரிட்டி மாரத்தான் ஆ என்று கேட்க ஆம் என் கூறி உள்ளே சென்றோம். ஐஐடிக்குள் செல்வது எனக்கு முதல் முறை.  பொள...

ஆப்பிளின் நிலம்....

 ஆப்பிள் தனக்குள்ளே தான் விளைந்த நிலத்தை வைத்திருந்தது. நீள நீளமாக வெட்டி சாப்பிடும் போது விளை நிலம் கண்ணில் தெரிவதில்லை. இன்று முழு ஆப்பிளையும் கடித்து சாப்பிடும் போது தான் கவனித்தேன். பனித்துகள்களால் ஆன பிரதேசத்தை காண்பது போல் இருந்தது. பனியின் நுனியில் இருக்கும் மினுமினுப்பை கூட காண முடிந்தது.  மாவு போல் இருக்கும் ஆப்பிள் விக்னேஷ்வருக்கு பிடிப்பதில்லை. நான் எப்போதும் சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்ததில்லை. மாவு போன்ற ஆப்பிளில் தான் கடித்த பிறகு அதனுள்  பனிப்பிரதேசத்தை கண்டேன். தன்னுடைய கனவை எத்தனை ஆயிரம் கிலோமீட்டர் கடந்து என்னிடம் சேர்த்திருக்கிறது.  கடித்த இடத்தில் சிறு  மரம் இருப்பது போலவும், நிறைய ஆப்பிள்கள் காய்த்திருப்பது போலவும் தோன்றியது தோற்றமயக்கம் தான் என்று தெளிவதற்கு சில நிமிடங்கள் ஆகியது. ஒவ்வொரு நிலமும் தன்னில் கனிந்து உருமாறியவை தான்  கனிக ள். Manobharathi Vigneshwar Raja Annamalaipuram 01-11-2024

பாரிஜாதம்.....

 வீட்டின் பின் முற்றத்தில் உதிர்ந்திருந்த பாரிஜாதம் நாணத்தால் சிவந்து கண் மூடி புன்னகைப்பது போல இருந்தது.  பிரம்ம முகூர்த்தத்தில் மலர்ந்து சூரியனின் முதல் கீற்று முத்தத்தில் நாணி பரவசம் தாள முடியாமல் நிலத்தில் உதிர்கிறது. தோழியான வாழை மரமும் , தோழனான கொய்யா மரமும் கேலி செய்ய, வயதில் மூத்த தாத்தாக்களான மாமரமும் , பலா மரமும்  இதெல்லாம் இந்த வயதில் இருப்பது தானே என்ற பெருந்தன்மையான புன்னகையை கொடுக்க , இவர்களிடமிருந்து தப்பிக்கொள்ள பாரிஜாதம் விரல்களால் விழியை மூடிக் கொண்டு குளிர்ந்திருக்கும் நிலத்தை நோக்கி உதிர்ந்து புன்னகைத்தது. காற்றின் மெல்லிய தொடுகையில், தன் கனவை கலைத்ததற்காக சிறு சிணுங்கலுடன்  கண்களை திறப்பது போல சில பூக்கள் வானத்தை நோக்கி உதிர்ந்திருந்தன.  இவற்றில் எந்த மலரை எடுப்பது என்ற தயக்கத்திலும் , அச்சத்திலும் சில கணங்களை செலவிட்டேன். அணில்களின் சத்தமும் , காகத்தின் குரலும் கேட்க , நிலத்தின் குளிர் மணம் மறைய ஆரம்பித்ததும் விடியலை உணர்ந்த பாரிஜாதம் நாணம் விலகி முகத்தில் லட்சமிகரம் தவழும் இல்லாளை போல மாறியது. சிறிய நிம்மதி பெருமூச்சூடன் அச்சமும் தயக்கமும்...

ரங்கமன்னார்.....

 ரங்கமன்னார் என்ற பெயரையே இந்த நவராத்திரியின் போது தான் அறிந்து கொண்டேன். கோதையின் மடியில் தலை வைத்து உலகமே அது தான் என சுகஜீவனம் கொண்டிருந்தார் பெருமாள்.உலகையே தன் மடியில் வைத்திருக்கும் சிறு கர்வம் கூட இல்லாமல் கோதையின் முகம் வெகு சாதாரணமாக சிறுமிக்குரிய துறுதுறுப்புடன் இருந்தது.  கொலுவில் மேலிருந்து இரண்டாம் படியில் ஆதிசேஷன் மீது படுத்திருக்கும் பெருமாளின் காலடியில் இருந்த லக்ஷ்மியின் முகம் அபலை பெண் போல இருந்தது. பெருமாளோ உலகையே காத்துக் கொண்டிருக்கும் பெருமிதம் பரவிய குறு நகையில் இருந்தார்.  காதலிகளுக்கு மட்டுமே என்று சில முகபாவனைகளை கைக் கொள்கிறார்கள் ஆண்கள். காதலியின் மடியில் தலை வைத்தும், மனைவியினை காலடியில் வைத்தும் என்று சிலை வடித்த சிற்பியின் கற்பனை உருவாக காரணமாக இருந்த புராணக்கதை எழுதியவரை நினைத்து புன்னகை எழுகிறது. காதலிகளுக்கு என்றுமே வயதாவதில்லை.  Manobharathi Vigneshwar Raja Annamalaipuram 21-10-2024

கத்துங் குயிலோசை.......

  பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த போது க்வாக்கி க்வாக்கி என்ற கடுமையான புதிய குரல் ஒன்றை கேட்டு பின்பக்க கதவை திறந்து வெளியே வந்தேன். நெல்லிக்காய் மரத்தின் இரண்டாவது கிளையில் அமர்ந்திருந்தது ஒரு பறவை . ஃபோல்கா புள்ளிகள் அதன் தேகம் முழுவதும் கருப்பு வெள்ளையாக இருந்தன. திரும்பவும் அதே போன்ற ஒரு கத்தல். காகத்தின் குரலில் கூட ஒரு அழைப்பு இருக்கும். இந்த பறவையின் குரல் எதையோ ஆணையிடுவது போல , கொஞ்சம் கடுமையாக இருந்தது.  அடுத்த நொடியே தொட்டு கண் மை இட்டுக் கொள்ளலாம் என்ற வண்ணத்தில் முழுமையான கருமையுடன் சிவப்பு மணி கண்களை உருட்டியபடி பலா மர கிளையில் வந்தமர்ந்தது இன்னொரு பறவை. ஃபோல்கா புள்ளி பறவையின் கத்தல் அமைதியாகியது. பலா மரத்தில் இருந்த பறவை தன்னுடைய சிவந்த வாயை திறந்தது. முதலில் க்வாக்கி என்ற சத்தத்தை கொடுத்து பிறகு க்கூ , க்க்கூ என்று கூவ ஆரம்பித்தது.  குரலை வைத்து தான் அது குயில் என்பதையே தெரிந்து கொண்டேன்.  நாலைந்து முறை கூவி விட்டு பலாமர கிளையிலிருந்து , நெல்லிக்காய் மர கிளைக்கு பறந்தமர்ந்தது. ஃபோல்கா புள்ளி பறவை மேலும் உயர்ந்த கிளையில் பறந்தமர்ந்தது. திரும்பவும் கு...

என்ன தவம் செய்தனை யசோதா !

 என்ன தவம் செய்தனை யசோதா ! பாடலை எவ்வளவோ முறை கேட்டும் இந்த வரிகளை இன்று தான் ஆழமாக உணர்ந்தேன். ப்ரமனும் இந்த்ரனும் மனதில் பொறாமை கொள்ள கண்ணனை உரலில் கட்டி வாய்பொத்திக் கெஞ்ச வைத்தாய் தாயே !  ப்ரம்மனையும், இந்திரனையும் நினைத்து சிரிப்பாக வந்தது.  அவர்களுக்கு இருப்பது வெறும் பொறாமை இல்லை . விஷ்ணுவை யார் கெஞ்ச வைக்க முடியும் ? நம்மிடம் ஒரு போதும் இவன் இப்படி சிக்க மாட்டேனே ! ஒரு முறையாவது கண்ணனை கெஞ்ச வைத்து வேடிக்கை பார்க்க நினைக்கும் இந்திரனும் , பிரம்மனும் யசோதாவை பார்த்து பெருமையும் , பொறாமையும் , ஏக்கமும் , குறுகுறுப்பும் கொள்வது எப்படி இருக்கும் என்ற கற்பனையில் மனம் நிறைந்து விம்முகிறது..... இதை எழுதும் போது பாபநாசம் சிவன் அவர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும் ? தன்னையே இந்திரனாகவும், பிரம்மனாகவும் கற்பனை செய்து அவர்களின் மனநிலையில் இருந்து எழுதக்கூடிய வரிகள் விண்ணகத்தின் ஊஞ்சலில் இருந்து தான் எழுதியிருக்க முடியும் !! என்ன தவம் செய்தனை யசோதா !!! Manobharathi Vigneshwar 30 June 2024

செராமிக் வகுப்பு

 இந்தோ - கொரியன் கல்ச்சுரல் சென்டரில் செராமிக் பொருட்கள் செய்வது எப்படி என்ற வகுப்பில் கலந்து கொண்டேன். போட் கிளப்பில் அமைந்துள்ள இடம் ஏதோ ஒரு மலை பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கு செல்வது போன்ற உணர்வை கொடுத்தது. நிலமெல்லாம் நீரால் கனன்று குளிர்ந்திருந்தது. கட்டிடத்தில் உள்ளே நுழைந்ததும் மெல்லிய எலுமிச்சை நறுமணத்துடன் ஏசியின் குளிர்காற்று நாசியில் ஏறியது. மஞ்சள் நிற சுடிதார் அணிந்த கொரியன் பெண் ஒருவர் வரவேற்று அமர செய்தார். எங்கேயும் நிழலே விழாதபடி வெளிச்சம் நிறைந்திருந்தது. வரவேற்பறையில் கொரியன் அழகுக்கலை , கட்டிடகலை மற்றும் இலக்கியம் சார்ந்த சஞ்சிகைகள் ஆங்கிலத்தில் இருந்தன.  இலக்கியம் சார்ந்த சஞ்சிகை ஒன்றை எடுத்து படிக்க ஆரம்பித்த போது , வகுப்பு ஆரம்பம் என்று அழைத்தார்கள். அதை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு வகுப்பிற்குள் நுழைந்தேன்.  மொத்தமாகவே ஐந்து பேர் மட்டுமே. அதில் ஒரே ஒரு ஆண். களிமண் கொண்டு உருவங்களை செய்வது எப்படி என்ற அறிமுக வகுப்பு. அவர்கள் பயன்படுத்துவது நம் நாட்டில் கிடைக்கும் களிமண் இல்லை. அதனோடு சேர்த்து சீன மற்றும் கொரியன் களிமண்ணை ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தில்...

ஜிம்

     எவ்வளவு நேரம் நடந்தாலும் நகராத நிலம். எத்துணை நேரம் மிதித்தாலும் பயணத்தை கொடுக்காத சைக்கிள்.தப்பி செல்ல முடியாமல் தவிக்கும் கனவைப் போல கண்முன்னே இருக்கின்றன ஜிம்மில் இருக்கும் மெஷின்கள். பழ ஈ ஒன்றின் முகம் போல இரண்டு முன் கைகளை நீட்டிக்கொண்டு சக்கரங்களை சுழல் வைக்கும் மெசின். சீட்டில் உட்கார்ந்தால் கால் எட்டாத சைக்கிளை நின்று கொண்டே மிதிப்பதை போன்ற உடல் அசைவை தருகிறது.   பகலிலேயே லைட் போட்டு அளவான குளிர் காற்றோடு கொஞ்சம் இரைச்சலாக கேட்கும் பாடல்களோடு ( ஒருவேளை எனக்கு மட்டும் தான் இரைச்சலோ ) சிலர் தங்கள் காதுகளுக்கு மட்டுமே கேட்குமாறு அதிக இரைச்சலை கொடுக்கும் ஹெட்செட் களை அணிந்தவாறு முற்றிலும் வேறு உலகத்தில் இருக்கிறார்கள் . நம்முடைய கால்களையும் , கைகளையும் அசைப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட மெஷின்கள்.   சக்கரத்தின் கண்டுபிடிப்பையே மாற்றம் செய்த தற்கால மனிதனின் அறிவு வளர்ச்சி.மெசின்கள் மனிதனை ஆட்டி வைக்கும் பொம்மலாட்ட நூல்கள் போலவே தெரிகின்றன. இயற்கையின் பிடியில் இருந்து தப்பிய மனிதன் தானே உருவாக்கிய மெசின்களின் பிடியில் உழன்று கொண்டிருக்கிறான். திரும்பும் இடமெல...

வெந்தயக்கீரை....

  அம்மியில் வைத்து அரைத்தால் நொறு நொறுவென சத்தத்துடன் மாவாக மாறும் தன்மையுள்ளதாக இருந்தது வெந்தயம்.‌ மெல்லிய கசப்பு மணம் அதை மேலும் வசீகரமுள்ளதாக்கியது. கைப்பிடி அளவு வெந்தயம் எடுத்து சிறு பாத்திரத்திலிட்டு கழுவினேன். நீர் மங்கலான மஞ்சள் நிறத்தில் சிறு தூசிகளுடன் உடையதாக ஆகியது. திரும்பவும் ஒரு முறை நீர் விட்டு கழுவினேன். கண்ணாடிக்குள் வெறுமனே வைத்தது போல் வெந்தயம் நீரில் மூழ்கியிருந்தது. இரவில் அதை மூடி வைத்துவிட்டு உறங்கிப்போனேன்.  மறு நாள் காலையில் வந்து பார்த்த போது தன்னால் குடிக்க முடிந்த அளவு நீரை உள்வாங்கி வளமான மினுமினுப்புடன்  வெந்தயம் அளவான புன்னகையை காட்டியது. நீர் அடர்த்தியான பழுப்பும் மஞ்சளும் கலந்த நிறத்தில் மெலிதான ஆடைகட்டி இருந்தது. திரும்பவும் நீர் விட்டு அலசி வடிகட்டினேன். முத்துக்கள் போல துணியில் அல்லாடியது வெந்தயம்.  தென்னை மரத்தின் வேரின் அருகில் சிறு பள்ளம் பறித்தேன்.  மண்ணை தன் உடல் முழுதும் இறுக்கமாக பூசிக் கொண்ட சிறு சிறு கற்களாக வந்தன. அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு சுண்டுவிரல் அளவான சிறு பள்ளத்தில் ஊறிய வெந்தயத்தை பரப்பினேன். அதன் மீது ப...

பூத்தொடுத்தல்....(அனுபவம்)

 கயிறுகளை வைத்து முடிச்சு போடும் பழக்கம் மனிதர்களுக்கு எப்படி வந்திருக்கும்?  சிறு வயதில் பூ தொடுப்பதை கற்றுக் கொள்ள ஆசைப்பட்டேன். ஆனால் பூக்களை இரண்டிரண்டாக எடுத்து தரும் பெரிய பொறுப்பை  கொடுத்து பூ தொடுப்பதை பற்றிய அறிவை தரமறுத்து விட்டனர். பக்கத்து வீட்டு அக்கா பூ தொடுப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன். கைவிரல்களை லாகவமாக வளைத்து , திருப்பி , இழுத்து என விரல்களில் நூலை வைத்து ஒரு நடன அசைவை கொண்டு வந்து தியான நிலையில்  பூ தொடுப்பதை பார்க்கும் போது ஆசையாக இருந்தது. நானும் ஒரு நாள் இதைப்போல் தியானத்தில் ஈடுபட வேண்டும் என்று நினைத்தேன். அந்த அக்காவின் அருகில் சிறுமி ஒருத்தி பூக்களை இரண்டிரண்டாக எடுத்து கொடுத்துக் கொண்டிருந்தாள்.  அம்மா எப்போதுமே கூறும் வார்த்தைகளில் ஒன்று " கண்ணு பாத்தா , கையி செய்யணும் " என்று. அந்த வார்த்தைகளை  நினைவில் மட்டுமே வைத்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை அப்படி எதையுமே செய்ய முயற்சித்ததில்லை. இன்று முயன்று பார்த்துவிட ஆசை வந்தது.  பூக்களை வீணாக்க மனது வரவில்லை. காகிதங்களை வைத்து கட்டிப் பழக முடிவு செய்தேன். அந்த அக்காவின் அருகிலேய...

வாசனை....(அனுபவம்)

இன்னும் இரண்டு நாட்களில் நல்ல மணம் வந்த பிறகு வெட்டுங்கள் என்று கொடுத்தார் கடைக்காரர். நான் மணிக்கொரு முறை பலாவின் வாசனை வருகிறதா என்று அருகில் சென்று முகர்ந்து பார்த்தேன். நான்கு நாட்கள் ஆகியும் மணம் வரவில்லை. இன்று இரவில் தண்ணீர் தாகம் எடுத்ததால், எழுந்து வாட்டர் பாட்டிலை தேடினேன். மிக மிக ரகசியமாக பலாவின் வாசனை வந்தது.  மின்சாரமில்லாத ஒரு இரவில், ஒற்றை மண்ணெண்ணெய் விளக்கு மட்டுமே வீடு முழுவதற்கும் வெளிச்சத்தையும், மெல்லிய மண்ணெண்ணெய் வாசத்தையும் ஒரு சேர பரப்பிக் கொண்டிருந்தது. அம்மா சமைத்துக் கொண்டிருக்க, பழைய பாட நோட்டுகளின் அட்டையை கூடாரம் போல் வைத்து சிறு சிறு கிராமங்களை உருவாக்கி நான் விளையாடிக் கொண்டிருந்தேன்.  அந்த விளக்கின் அருகில் அமர்ந்து, போர்வையை போர்த்திக் கொண்டு, தலையை மேலும் கீழும் ஆட்டியபடி, அக்கா படித்துக் கொண்டிருந்தாள். நாஞ்சில் நாட்டு " வாடைக் காற்று பலாவை வாட்டி எடுத்தது " என்று. பொள்ளாச்சியில் ஒரு கிராமத்தின் தென்னந்தோப்பில் இருந்த எங்களின் வீட்டில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சங்ககவி நுகர்ந்த அந்த பலாவின் வாசனை , அக்கா படித்த  புத்தகத்தின் வழ...

குப்பை.....( அனுபவம் )

 வீடே குப்பையாக இருப்பதை உணர்ந்தேன். அடுக்கியிருந்த புத்தகங்களை தூசியை துடைத்து திரும்பவும் அடுக்கினேன்.நுண்ணிய தூசிகளை வெள்ளைத் துணியில் மட்டுமே உணர முடிந்தது. வெறும் பார்வை தரும் ஏமாற்றத்தை உணர்ந்தேன்.புத்தகங்கள் வெளிவந்த காலத்திற்கும் அதை நான் படித்த காலத்திற்கும் இருக்கும் கால இடைவெளிகளை இந்த மெல்லிய தூசிகளைப் போலவே துடைத்தெறிய முடிந்தால் ? பூஜை அறையின் கதவு கூட மெல்லிய எண்ணெய் பிசுபிசுப்புடன் இருந்தது.குத்துவிளக்கின் திரிகள் எண்ணெயை முடிந்த வரைக்கும் உறிஞ்சி ஒளி விட்டுக் கொண்டிருந்தன. எண்ணெய் இருந்த குத்துவிளக்கின் பகுதி பாசி படிந்த நிலையில் இருந்தது.சிக்கு பிடித்த எண்ணெய் வாசம் நாசியில் ஏறியது. எலுமிச்சை நீரை வெள்ளைத் துணியில் நனைத்து கதவையும், சாமி படங்களையும், குத்துவிளக்கையும் துடைத்தேன். கடவுளர்கள் அபிஷேகம் முடிந்த பளபளப்பில் அருள்பாலித்தனர்.  விக்னேஷ்வருடைய அறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தேன்.எத்தனை பில் காகிதங்கள்.எழுத்துக்கள் எல்லாம் மறைந்து விட்டது. ஆனாலும் அதை செல்ஃபிலேயே வைத்திருக்கிறார். மொத்தமாக எடுத்து போடும் போது ஏடிஎம் மெசினை சுற்றியிருப்பதை போல இருந்தது. டை...

மழை நாள்....(அனுபவம்)

  தலையில் வெள்ளை பாலிதீன் கவரை அணிந்து கொண்டு ஆடுகளை ஓட்டியபடி ஒருவர் சென்றார். பாலிதீன் கவர் மேல் மழைத்துளிகள்  நிறைந்திருந்தன.பால்  பாயசத்தில் தெரியும்  ஜவ்வரிசி போல இருந்தது. இரண்டு நாட்களாக புயல் எச்சரிக்கை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.செல் ஃபோன் சார்ஜ் இல்லாமல் அணைந்து எட்டு மணி நேரமாகிறது. பக்கத்து வீட்டு தோட்டம் தெளிவாக தெரிந்தது. எறும்புகள் வாழை மரத்தின் வேரின் அருகில் உள்ள தங்களுடைய இருப்பிடத்திற்கு சுறுசுறுப்பாகவும் சீராகவும் சென்று கொண்டிருந்தன.எறும்பின் இயக்கத்தை கூட பாதிக்காத வகையில் ஒரு மெல்லிய தூறல்.மழை பெய்து கொண்டிருப்பதை வாழை இலையில் நீர் நூலருவி போல் வழிவதை வைத்தே அறிய முடிந்தது.மழை எப்போது அழகாகிறது? வாழை இலையில் விழும்போது தான் என்று எண்ணிக்கொண்டேன்.அடுத்த கணமே அந்த வாழைக்கன்றை  ஓடி வந்த ஆடு மோதி விட்டு தாண்டி சென்றது.எதிர் வீட்டு அக்கா வந்து பால்காரர் வந்துட்டு போயாச்சா என்று பக்கத்து வீட்டு அக்காவிடம் கேட்டாள். பாருங்க்கா ஆடு முட்டி வாழக்கன்னு சாஞ்சிருச்சு என்று  கூறினாள் பக்கத்து வீட்டு அக்கா.  ஆமாங்கண்ணு  நானு...

நண்பகல்....(அனுபவம்)

 தெருவில் நாய்களும் நண்பகல் உறக்கத்தில் இருந்தன. வெயில் மட்டுமே தன்னந்தனியாக அலைந்து கொண்டிருந்தது. வெயிலை போன்ற சுதந்திரமான நிலை எனக்கு வேண்டும் என்று சிறு வயதில் ஆசைப்பட்டிருக்கிறேன். சுதந்திரமான வாழ்க்கை தான் அபாயகரமானது என்பது வளர வளர புரிந்தது.எங்கேயோ ஒற்றைக் காகம் கரைந்து முடித்தது. மத்தியான நேரத்தில் தனியே கரையும் காகத்தின் குரல் , வீட்டை பார்த்து கொண்டு வீட்டிலேயே இருக்கும் பெண்களின் தனிமையை உணர்த்துவதாக இருந்தது.  இந்த பகல் பொழுது நீண்டு கொண்டே இருக்கிறது.அதை நீட்டிக்க விரும்பாமல் வெளியே வந்தேன்.காம்பவுண்டு சுவரில் காகத்திற்கு காலையில் வைத்த இட்லியில் அரை இட்லி காய்ந்திருந்தது.பிள்ளையார் கோவிலின் சாத்தப்பட்ட கம்பி கதவுகளின் மேல் வெயில் தெரிந்தது. பூனை ஒன்று சோம்பலாக நடந்து சென்றது.தெருவில் புழுதி கூட தூங்கிக் கொண்டிருந்தது. வாகனங்கள் ஏதுமில்லை.ஏன் இவ்வளவு இறுக்கமாக இருக்கிறது இந்த நண்பகல்? தெருவில் இருக்கும் வீடுகளிலிருந்து எந்த சத்தமும் வரவில்லை.கைவிடப்பட்ட புராதனமான கிராமத்தில் தனியாக நடந்து கொண்டிருப்பது போல் தோன்றியது.எத்தனை வடிவமைப்புகளுடன் கூடிய வீடுகள்.வெயிலுக்...