அம்மியில் வைத்து அரைத்தால் நொறு நொறுவென சத்தத்துடன் மாவாக மாறும் தன்மையுள்ளதாக இருந்தது வெந்தயம். மெல்லிய கசப்பு மணம் அதை மேலும் வசீகரமுள்ளதாக்கியது. கைப்பிடி அளவு வெந்தயம் எடுத்து சிறு பாத்திரத்திலிட்டு கழுவினேன். நீர் மங்கலான மஞ்சள் நிறத்தில் சிறு தூசிகளுடன் உடையதாக ஆகியது. திரும்பவும் ஒரு முறை நீர் விட்டு கழுவினேன். கண்ணாடிக்குள் வெறுமனே வைத்தது போல் வெந்தயம் நீரில் மூழ்கியிருந்தது. இரவில் அதை மூடி வைத்துவிட்டு உறங்கிப்போனேன். மறு நாள் காலையில் வந்து பார்த்த போது தன்னால் குடிக்க முடிந்த அளவு நீரை உள்வாங்கி வளமான மினுமினுப்புடன் வெந்தயம் அளவான புன்னகையை காட்டியது. நீர் அடர்த்தியான பழுப்பும் மஞ்சளும் கலந்த நிறத்தில் மெலிதான ஆடைகட்டி இருந்தது. திரும்பவும் நீர் விட்டு அலசி வடிகட்டினேன். முத்துக்கள் போல துணியில் அல்லாடியது வெந்தயம். தென்னை மரத்தின் வேரின் அருகில் சிறு பள்ளம் பறித்தேன். மண்ணை தன் உடல் முழுதும் இறுக்கமாக பூசிக் கொண்ட சிறு சிறு கற்களாக வந்தன. அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு சுண்டுவிரல் அளவான சிறு பள்ளத்தில் ஊறிய வெந்தயத்தை பரப்பினேன். அதன் மீது பறித்தெடுத்த மண்ணை மேலோட்
பசுஞ்சாணத்தை குளிர்ந்த நீரில் கரைக்கும் போது மட்டுமே எழும் மணம் மார்கழியின் அதிகாலை தான். மூன்றாம் வகுப்பில் மீனலோசினி டீச்சர் காலை ஐந்து மணிக்கு வெள்ளி கோள் பூமிக்கு மிக அருகில் தெரியும் என்று வகுப்பெடுத்திருந்தார். சின்னதா மூக்குத்தி மாதிரி மினுங்கிட்டு இருக்கும் என்று கூறும் போது டீச்சருடைய மூக்குத்தி போல இருக்குமோ என்று கற்பனை செய்திருந்தேன். பெரியவள் ஆனதும் மீனலோசினி டீச்சர் போலவே மூக்குத்தி போட வேண்டும் என்று எண்ணினேன். அன்றிரவே அம்மாவிடம் அதிகாலை ஐந்து மணிக்கு என்னை எழுப்பும்படி கூறிவிட்டு உறங்கிப் போனேன். காலையில் அம்மா வாசல் தெளிக்கும் தப்தப்பென்ற சத்தம் கேட்டு வேகமாக பாயிலிருந்து எழுந்து ஓட எத்தனிக்கும் போது கொலுசின் திருகாணி பாயின் நூலில் மாட்டிக் கொண்டு தாமதப்படுத்தியது. நூலை வேகமாக இழுத்து பிய்த்துக் கொண்டு வெளியே ஓடினேன். அம்மா, உங்கள அஞ்சு மணிக்கு என்னய எழுப்ப சொன்னேன்ல என்று முகத்தில் விழுந்த முடியை இருபுறமும் தள்ளிவிட்டுக் கொண்டு வானத்தை நோக்கியபடி கேட்டேன். இன்னும் அஞ்சு ஆகல சாமி என்று கூறியது எங்கேயோ கனவில் கேட்டது. வானத்தின் ஓரத்தில் மினுங்கிய மூக்குத்தியை பா