Skip to main content

Posts

Showing posts from March, 2023

மழை நாள்....(அனுபவம்)

  தலையில் வெள்ளை பாலிதீன் கவரை அணிந்து கொண்டு ஆடுகளை ஓட்டியபடி ஒருவர் சென்றார். பாலிதீன் கவர் மேல் மழைத்துளிகள்  நிறைந்திருந்தன.பால்  பாயசத்தில் தெரியும்  ஜவ்வரிசி போல இருந்தது. இரண்டு நாட்களாக புயல் எச்சரிக்கை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.செல் ஃபோன் சார்ஜ் இல்லாமல் அணைந்து எட்டு மணி நேரமாகிறது. பக்கத்து வீட்டு தோட்டம் தெளிவாக தெரிந்தது. எறும்புகள் வாழை மரத்தின் வேரின் அருகில் உள்ள தங்களுடைய இருப்பிடத்திற்கு சுறுசுறுப்பாகவும் சீராகவும் சென்று கொண்டிருந்தன.எறும்பின் இயக்கத்தை கூட பாதிக்காத வகையில் ஒரு மெல்லிய தூறல்.மழை பெய்து கொண்டிருப்பதை வாழை இலையில் நீர் நூலருவி போல் வழிவதை வைத்தே அறிய முடிந்தது.மழை எப்போது அழகாகிறது? வாழை இலையில் விழும்போது தான் என்று எண்ணிக்கொண்டேன்.அடுத்த கணமே அந்த வாழைக்கன்றை  ஓடி வந்த ஆடு மோதி விட்டு தாண்டி சென்றது.எதிர் வீட்டு அக்கா வந்து பால்காரர் வந்துட்டு போயாச்சா என்று பக்கத்து வீட்டு அக்காவிடம் கேட்டாள். பாருங்க்கா ஆடு முட்டி வாழக்கன்னு சாஞ்சிருச்சு என்று  கூறினாள் பக்கத்து வீட்டு அக்கா.  ஆமாங்கண்ணு  நானும் பால் டீ குடிச்சு நாலு நாள் ஆச்சு என்

நண்பகல்....(அனுபவம்)

 தெருவில் நாய்களும் நண்பகல் உறக்கத்தில் இருந்தன. வெயில் மட்டுமே தன்னந்தனியாக அலைந்து கொண்டிருந்தது. வெயிலை போன்ற சுதந்திரமான நிலை எனக்கு வேண்டும் என்று சிறு வயதில் ஆசைப்பட்டிருக்கிறேன். சுதந்திரமான வாழ்க்கை தான் அபாயகரமானது என்பது வளர வளர புரிந்தது.எங்கேயோ ஒற்றைக் காகம் கரைந்து முடித்தது. மத்தியான நேரத்தில் தனியே கரையும் காகத்தின் குரல் , வீட்டை பார்த்து கொண்டு வீட்டிலேயே இருக்கும் பெண்களின் தனிமையை உணர்த்துவதாக இருந்தது.  இந்த பகல் பொழுது நீண்டு கொண்டே இருக்கிறது.அதை நீட்டிக்க விரும்பாமல் வெளியே வந்தேன்.காம்பவுண்டு சுவரில் காகத்திற்கு காலையில் வைத்த இட்லியில் அரை இட்லி காய்ந்திருந்தது.பிள்ளையார் கோவிலின் சாத்தப்பட்ட கம்பி கதவுகளின் மேல் வெயில் தெரிந்தது. பூனை ஒன்று சோம்பலாக நடந்து சென்றது.தெருவில் புழுதி கூட தூங்கிக் கொண்டிருந்தது. வாகனங்கள் ஏதுமில்லை.ஏன் இவ்வளவு இறுக்கமாக இருக்கிறது இந்த நண்பகல்? தெருவில் இருக்கும் வீடுகளிலிருந்து எந்த சத்தமும் வரவில்லை.கைவிடப்பட்ட புராதனமான கிராமத்தில் தனியாக நடந்து கொண்டிருப்பது போல் தோன்றியது.எத்தனை வடிவமைப்புகளுடன் கூடிய வீடுகள்.வெயிலுக்கு துணையா

அதிகாலை....(அனுபவம்)

 இருள் மட்டுமே இருந்த அதிகாலை, எதிர் வீட்டில் இருக்கும் அக்கா பாத்திரத்தை கொண்டு வந்து வாசலில் வைத்து துலக்க ஆரம்பித்தார். வளையல்கள் பாத்திரத்தில் உராயும் ஓசையும் சல்சலென்று தண்ணீர் இரைத்து கழுவும் ஒலியும் இருந்தது.கழுவிய நீர் வளைந்து வளைந்து அவர்களின் கனகாம்பரச் செடிக்கு சென்றது.இருளில் அதன் சாம்பல் நிறம்  பாதரச  ஓடை போல் இருந்தது. பொழுது இன்னும் விடியவில்லை. நிறைய வீடுகளின் வாசற் கதவுகள் திறந்திருக்கவில்லை.காகங்களின் குரல் கூட இல்லை. அதிகாலைக்கென்றே ஒரு மணம் இருக்கிறது. அதை எந்த சமையிலிலாவது கொண்டு வந்து விட முடியுமா என்று நிறைய முறை சிந்திக்கிறேன். நம்முடைய உணர்வுகள் மணத்தை உருவாக்குகிறதா? இல்லை மணம் தான் உணர்வுகளை உருவாக்குகிறதா?  எதிர் வீட்டு அக்கா இப்போது வாசல் கோலம் போட்டுக் கொண்டு இருந்தார். வீட்டினுள் வந்தேன். குளிர்சாதனப் பெட்டியின் மெல்லிய உறுமல் மட்டுமே இருந்தது. நான் சுவர் கடிகாரம் மாட்டி வைப்பதில்லை.இருந்திருந்தால் அதனுடைய துடிப்பும் கேட்டிருக்கும். எனக்கு அதன் மேல் எப்போதுமே ஒரு ஒவ்வாமை இருப்பதுண்டு.காலம் ஓடுவதை விடாமல்

Introduction...

          பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்று ஆட்டோமேஷன் இன்ஜினியராக பணியாற்றி  வந்தேன்.  தற்போது திருமணத்திற்கு பிறகு செப்டம்பர் 25, 2020 முதல் , தமிழின் பல துறைகளை  சார்ந்த நூல்களை , ஒலி வடிவில் மாற்றும்  ப ணியை  துவங்கியுள்ளேன். வெப்சைட் டிசைனராக பணிபுரிந்து வருகிறேன். நாட்டுடைமையாக்கப்பட்ட  புத்தகங்களையும் , மற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களையும் அவர்களின் அனுமதியோடு  பெருட்செவி ( www.perutchevi.com ) எனும் இணையதளத்தில் பதிவிட்டு வருகிறேன்.  கணவர்  விக்னேஷ்வர் அரசு பொதுத்துறை வங்கி ஒன்றின் மேலாளராக பணியாற்றி  வருகிறார்.  வாசித்த புத்தகங்கள் , சென்ற பயணங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் நான் உணரும் தருணங்களை பற்றி சிறுபொழுது எனும் வலைத்தளத்தில் எழுதி வருகிறேன். அன்புடன் , மனோபாரதி விக்னேஷ்வர்.

Contact

Manobharathi Vigneshwar Mail   : admin@perutchevi.com Other Works :  www.perutchevi.com
  சிறுகதை  அனுபவம் நினைவுகள் சமூகம் பயண ம் வாசிப்பு