Skip to main content

Posts

Showing posts from May, 2026

அன்னபூர்ணியின் பொழுதுகள் - 6

  அன்னபூர்ணியின் பொழுதுகள் - 6 சில வார்த்தைகளை கேட்கும்  போதெல்லாம் அன்னபூர்ணி மகிழ்ச்சி அடைகிறாள். விக் ... னேஷ் ... வர்.... என ராகம் போட்டு அழைக்கும் போது சிரித்தாள். இங்க பாருங்க உங்க பேர் கேட்டதும் சிரிக்கறா!  என கூறினேன்.  நான் அழைத்ததை போன்ற ராகத்தில் "ஒரு கிலோ கத்திரிக்காய்!" என பேசினார். அதற்கும் சிரித்தாள் அன்னபூர்ணி. மனோ , அவ உன்னோட குரல் ஏற்ற இறக்கத்தில வர ராகத்துக்கு தான் மகிழ்ச்சி அடைகிறாள். பேருக்கு இல்லை. பேர் எல்லாம் தெரிந்து கொள்ள இன்னும் இரண்டு மாத காலம் ஆகும் என்றார் விக்னேஷ்வர். Manobharathi Vigneshwar Raja Annamalaipuram May - 23, 2026

அன்னபூர்ணியின் பொழுதுகள் - 5

 அன்னபூர்ணியின் பொழுதுகள் - 5 விளையாடிக் கொண்டிருக்கும் போது அன்னபூர்ணியின்  பாதங்களை எடுத்து என் கண்ணுக்கு மேல் வைத்தேன். அவளுடைய பாதத்தின் குளிர்ச்சி என் கண்களின் வெம்மையை தணித்தது . விக்னேஷ்வரிடமும் அப்படி செய்து பார்க்கும் படி கூறினேன்.  அதே போல் செய்த பிறகு , கண்களை மூடிக்  கொண்டே உணர்ச்சி ததும்ப , ஒரு வேளை சிவனின் பாதங்கள் கண்ணப்பநயினாருக்கு இப்படி தான் குளிர்ச்சியை கொடுத்திருக்கும் என்றார் விக்னேஷ்வர் . Manobharathi Vigneshwar Raja Annamalaipuram May - 23, 2026

அன்னபூர்ணியின் பொழுதுகள் - 4

  அன்னபூர்ணியின் பொழுதுகள்  அன்னபூர்ணிக்கு இப்போதைக்கு பிடித்தமானதாக இருப்பது  , மின்விசிறி காற்றினால் அலைக்கழியும் காலண்டர் தாள்கள். அவை அசையும் போதெல்லாம் அதை பார்த்து மகிழ்ச்சியை சிறு சப்தமாக கொடுக்கிறாள். ஏன் காற்றில் ஆடும் பொருட்கள் ஐந்து மாத குழந்தைக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது?. தனக்கு தானே விளையாடி, கை கால்களை அசைத்து மகிழ்ந்து , சற்று நேரம் எதையோ சிந்தித்து மிக அமைதியாகி , பின்னர் திரும்பவும் கைகளை அசைத்து வேறு சிந்தனைக்கு செல்கிறாள்.அவளுள் அவள் முழுமையாக இருக்கும் நேரத்தில் ,  அதை  ஊழ்கம் என்று கூட அழைக்கலாம். அப்போதெல்லாம் அன்னை அவளுக்கு ஒரு பொருட்டே இல்லை.  அந்த தருணம் முழுமை பெற்று உலகியலுக்கு திரும்பும் நேரத்தில் மட்டுமே என்னை தேடுகிறாள்.  Manobharathi Vigneshwar Raja Annamalaipuram May - 21, 2026

அன்னபூர்ணியின் பொழுதுகள் - 3

அன்னபூர்ணியின் பொழுதுகள்  விக்னேஷ்வர் முகத்தை பார்த்ததும் குதூகலமாகி விடுகிறாள் அன்னபூர்ணி. அப்பா என்று அவளுக்கு தெரிகின்றதா? அவரிடம் மட்டுமே காட்டுவதற்கு தனி சிரிப்பும், புன்னகையும்,முகபாவமும்  வைத்திருக்கிறாள். அவர் வரும் வரை அந்த பொக்கிஷத்தை யாருக்கும் தெரியாமல் எங்கே வைத்திருப்பாளோ? அவரிடம் சென்ற பிறகு என்னை பார்த்து ஒரு புன்முறுவல் செய்வாள்.நான் எங்கே இருக்கிறேன் பார்த்தாயா? என்பது போல இருக்கும் அவளின் முகபாவம். அவரிடம் மட்டுமே பேசுவதற்கு தனி மொழியை கற்றுக்கொண்டுள்ளாள். அவருக்கு அந்த மொழி புரியவில்லை என்றாலும், என்னிடம் அவள் பேசும் மொழிக்கும் அவரிடம் பேசும் மொழிக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து பெருமை கொள்கிறார். Manobharathi Vigneshwar Raja Annamalaipuram May - 20, 2026  

அன்னபூர்ணியின் பொழுதுகள் - 2

 அன்னபூர்ணியின் பொழுதுகள்  அன்னபூர்ணி குறும்பு செய்யும் போதெல்லாம் நான் குட்டி கிருஷ்ணனையே பழி சொல்வதாக விக்னேஷ்வர் சிரிக்கிறார். யசோதாவின் மடியில் சமர்த்தாக அமர்ந்திருக்கும் இந்த குட்டி கிருஷ்ணன் தான் அனைத்து குழந்தைகளின் கனவிலும் சென்று குறும்பு செய்ய கற்று கொடுப்பவன் என அன்னையருக்கு தானே தெரியும். Manobharathi Vigneshwar Raja Annamalaipuram April - 24, 2026

அன்னபூர்ணியின் பொழுதுகள் - 1

 அன்னபூர்ணியின் பொழுதுகள்  மடியில் உறங்கும் மகளின் உறக்கம் கலையக்கூடாதென , என் கையில் அமர்ந்த கொசு உதிரத்தை உறிஞ்சி உருவத்தில் பெரிதாவதை பார்த்துக்கொண்டிருந்த போது கர்ணனனை மிக அணுக்கமாக உணர்ந்தேன். Manobharathi Vigneshwar Raja Annamalaipuram March - 21, 2026