Skip to main content

ஜிம்

     எவ்வளவு நேரம் நடந்தாலும் நகராத நிலம். எத்துணை நேரம் மிதித்தாலும் பயணத்தை கொடுக்காத சைக்கிள்.தப்பி செல்ல முடியாமல் தவிக்கும் கனவைப் போல கண்முன்னே இருக்கின்றன ஜிம்மில் இருக்கும் மெஷின்கள்.





பழ ஈ ஒன்றின் முகம் போல இரண்டு முன் கைகளை நீட்டிக்கொண்டு சக்கரங்களை சுழல் வைக்கும் மெசின். சீட்டில் உட்கார்ந்தால் கால் எட்டாத சைக்கிளை நின்று கொண்டே மிதிப்பதை போன்ற உடல் அசைவை தருகிறது. 

பகலிலேயே லைட் போட்டு அளவான குளிர் காற்றோடு கொஞ்சம் இரைச்சலாக கேட்கும் பாடல்களோடு ( ஒருவேளை எனக்கு மட்டும் தான் இரைச்சலோ ) சிலர் தங்கள் காதுகளுக்கு மட்டுமே கேட்குமாறு அதிக இரைச்சலை கொடுக்கும் ஹெட்செட் களை அணிந்தவாறு முற்றிலும் வேறு உலகத்தில் இருக்கிறார்கள் . நம்முடைய கால்களையும் , கைகளையும் அசைப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட மெஷின்கள். 

சக்கரத்தின் கண்டுபிடிப்பையே மாற்றம் செய்த தற்கால மனிதனின் அறிவு வளர்ச்சி.மெசின்கள் மனிதனை ஆட்டி வைக்கும் பொம்மலாட்ட நூல்கள் போலவே தெரிகின்றன. இயற்கையின் பிடியில் இருந்து தப்பிய மனிதன் தானே உருவாக்கிய மெசின்களின் பிடியில் உழன்று கொண்டிருக்கிறான். திரும்பும் இடமெல்லாம் கண்ணாடிகள். மனிதர்கள் தொடர்ச்சியாக தங்களை தாங்களே பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். மஹாபாரத வெண்முரசில் சித்தராங்கதன் என்ற இளவரசன் தன்னுடைய ஆடி பிம்பத்தை மட்டுமே நோக்கி கொண்டே இருப்பான். பிறகு ஒரு நாளில் வனத்தில் வேட்டைக்கு சென்றவன் ஒரு சுனையில் நீர் அருந்தும் போது சுனையில் தெரிந்த சித்தராங்கதன் என்ற கந்தர்வனை பார்த்து தான் என நினைத்து துரத்தி உள்ளே சென்று மறைவான் . ஜிம்மின் கண்ணாடி வழியே  எப்போது சித்ராங்கதன் என்ற கந்தர்வன் எழுந்து அவர்களை கவர்ந்து செல்வான் என்று நான் நோக்கி கொண்டே இருக்கிறேன். கந்தர்வன் வந்து கவர்ந்து செல்வதெல்லாம் கலியுகத்தில் இல்லை. மனிதர்கள் தங்கள் கண்களுக்குள்ளேயே தங்களுக்கான கந்தர்வனை வைத்துள்ளார்கள் என்றே நினைக்கிறேன். அவர்கள் கவர்ந்து செல்லப்பட்டாலும் அதை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். 

ஸ்ட்ரெச்சிங் என்ற பயிற்சி நம்முடைய உடல் பாகங்களை அசைவின் மூலம் விழிப்பு நிலைக்கு கொண்டு வருவது. இந்தப் பயிற்சியின் போது தான் மனித உடலில் எவ்வளவு இணைப்புகள் உள்ளன என்றே தெரிகிறது. நான் என்பது நான் இல்லை இத்தனை பாகங்களின் இணைப்பு தான் என்றால் நான் என்பது என்ன ? தத்துவ சிக்கல்களை கொடுக்கிறது ஜிம்.
  
அதிகாலையில் செல்லும் போது ஜிம் கொஞ்சம் புத்துணர்வோடு இரண்டொரு நபர்களுடன் சத்தமில்லாத அசைவுகளுடன் இருக்கும். நேரம் செல்ல செல்ல மனிதர்கள் கூட கூட அவ்விடமே அத்துணை மனிதர்களின் கூட்டான மனவிசையை போல செயல்பட ஆரம்பிக்கிறது. உடல் உழைப்பே இல்லாமல் முதன்முறையாக உடற்பயிற்சிக்கு வருபவர்களுக்கு மயக்கமும் , வாந்தியும் வந்துவிடுகிறது. ஆரம்ப கட்ட பயிற்சிகளை மேற்கொள்பவர்கள் , பலம் பொருந்திய தந்தையின் கைகளை பிடித்து தொங்கி விளையாடும் குழந்தைகள் போல இருக்கிறார்கள். கடுமையான பயிற்சிகளை மேற்கொள்பவர்கள் வந்த பிறகு அவ்விடம், இருள் சூழ்ந்த அடர் கானகத்தில் பெருமரமொன்றை அசைத்துக் கொண்டிருக்கும் தனித்த காட்டு யானைகள் சூழ்ந்ததாகி விடுகிறது.

ட்ரெயினிங் வரும் இளைஞர்கள் திரைப்படம் பார்த்து ஜிம் வந்தவர்களாக இருக்கிறார்கள். பெரும்பாலும் ஆண், பெண் உறவு சிக்கல்கள் குறித்த பிரச்சினைகளினால் தான் வருகிறார்கள். தன்னை தான் நன்றாக கவனித்து கொள்வதற்கு கூட  யாரோ ஒருவரால் ஏமாற்றப்பட்டாக  வேண்டும் . அது எந்த விதத்தில் ஆனாலும் சரி. குடும்பத்திலோ, அலுவலகத்திலோ என அனைத்து தனி மனித உறவு சார்ந்த பிரச்சினைகளிலும் அவர்களை பழி வாங்குவதற்காக  தன்  உடலை பலப்படுத்தினால் போதும் என்ற அளவிற்கு சமூகத்தின் மனநிலை வளர்ந்து வந்துள்ளது. ஒருவேளை தன்னை கவனிக்க ஆரம்பித்த பிறகு மற்றவை எல்லாம் ஒரு பொருட்டாகவே தெரிவதில்லை போலும்.

திருமண வயதில் இருக்கும் ஆண்களும் , பெண்களும் உடல் எடை குறைப்பதற்காக வருகிறார்கள் . வெளிநாட்டு நிறுவனங்களில் அந்த நாட்டு  நேரத்திற்கேட்ப இங்கே இருந்து வேலை செய்யும் பணியில் இருப்பவர்களின் எடை இயல்பாகவே அதிகமாக இருக்கிறது . எங்கோ யாரோ ஒருவரின் சொகுசு வாழ்க்கைக்காக இங்கே வேலை செய்து அதற்கான ஊதியத்தை பெற்று அதில் சொகுசாக வாழ்வதாக நம்பி கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் மனித வளம் தான் அதனுடைய பொருளாதார மூலம் . நம் நாட்டின் ஒரு மாநிலத்தின் மக்கள் தொகையின் பாதி அளவிற்கே மனித வளம் கொண்ட ஐரோப்பிய நாடுகளின் தேவைக்கு இங்கே இருந்து அவர்களின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு  நபர்கள் வேலை செய்கிறோம். நம்முடைய தேவையை யார் பூர்த்தி செய்வது? உலகத்தின் நுகர்வு அதிகரித்து கொண்டே செல்லும் போது  பணி  சுமையும் அதிகரிக்கிறது. பணி சுமையின் காரணமாக மன உளைச்சல், உடல் எடை அதிகரிப்பு , உடல் நல குறைவு என சங்கலி நீள்கிறது. தன்னுடைய பணியை தானே செய்வதிலிருந்து தொடங்கும் தனி மனித ஒழுக்கமும் , ஆரோக்கியமும் என்றார் காந்தி . நாம் எவருக்கோ பணி  செய்து சம்பாதித்து , நம்முடைய அன்றாட பணியை வேறு எவரையோ செய்ய வைத்து அதற்கு சம்பளம் கொடுத்து என்று வெளியேற முடியாத சக்ர வியூகத்தில் மாட்டி கொண்ட அபிமன்யுகள் ஆகி விடுகிறோம்.எத்தனை பேர் தினமும் வானம் பார்க்கிறார்கள்? தனக்கான நேரம் என்று ஏதேனும் எவருக்கேனும் இருக்கிறதா? அதை தனக்காக மட்டுமே செலவிடுகிறார்களா? சிந்தனை செய்வதற்கான அவசியமே யாருக்கும் இருப்பதில்லை. கொடுக்கும் பணியை முடிக்க வேண்டும் அதற்கு சிந்திக்க தேவை இல்லை. சிந்தனை இல்லாமல் வேலை செய்வதற்கு ஒருவருக்கு எதற்கு படிப்பு? அதை மெசின்களை வைத்தே செய்து விட முடியுமே! தற்போது இருக்கும் கல்விமுறை சிந்திப்பதை கற்று கொடுப்பதில்லை. கீழ்ப்படிதலை மட்டுமே சொல்லி கொடுக்கிறது. சிந்திக்க தெரிந்த மனிதன் அறமற்ற செயல்களுக்கு கீழ்ப்படிய மாட்டான் என்பதனலா?

எலும்பின் மேல் தோல் போர்த்தியது போல உடல்வாகு கொண்ட பெண் ஒருவர் தன்னுடைய கனத்தை விட அதிகமான கனத்தை தூக்கி பயிற்சி செய்கிறார். பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் , உடல் பலத்தை கூட்டுவதில் உள்ள விழிப்புணர்வு இருப்பது புரிந்தது. ஜிம் என்பது தேக பலத்தை கூட்டுவதற்கே என்று புரிந்து கொள்ள அந்த பெண் உதவியாக இருக்கிறாள்.

வயதானவர்கள் ஏதேனும் ஒரு உடல் அசைவுகள் தேவை என்ற காரணத்தினால்  வருகிறார்கள். அவர்களுக்கான மெசின்களில் அந்த நேரத்தில் யார் எதை செய்து கொண்டிருந்தாலும் அதை விட்டு எழுந்து கொள்ள வேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள். வயதானவர்களை பார்க்கும் போது சலிப்பும்,ஏக்கமும்,பயமும் ஒருங்கே வருகிறது. வாழ்கை முழுதும் ஓடி ஓடி பணம் சம்பாதித்து , இப்போது ரிடியர்மெண்ட் லைப் ஐ என்ஜாய் செய்வதாக நம்பி கொண்டிருப்பவர்கள். எப்போது தான் வாழ்க்கையை வாழ்ந்திருப்பார்கள் ? இப்போதிருக்கும் இளமையை கொண்டு எவ்வளவு மகிழ்வாக வாழ முடியுமோ அவ்வளவு மகிழ்வாக வாழ வேண்டும் என்ற உத்வேகத்தையும் நமக்குள் ஏற்படுத்துகிறார்கள்.

பள்ளி செல்லும் சிறுவர்கள் விளையாட்டுக்கு தேவையான உடற்பயிற்சியை செய்ய வருகிறார்கள். அதிகாலையில் எழுந்து படிப்பதை மட்டுமே பள்ளி நாட்களில் தெரிந்திருந்த எனக்கு , காலையில் உடல் பயிற்சிக்காக வரும் மாணவர்களை பார்க்க வித்தியாசமாக  இருந்தது.இரண்டு அடி உயரத்தில் வரிசையாக தடைகளை வைத்து ஒவ்வொருவராக அதை தாண்டி சுழற்சி முறையில் தொடர்ச்சியாக வந்து கொண்டே  இருந்தார்கள். அடுத்தடுத்த முறையில் தடைகளின் உயரம் அதிகரித்து கொண்டே சென்றது.  காற்றின் வேகத்தில் தொடர்ச்சியாக  மரத்திலிருந்து சுழன்று விழும் இலைகளின் அழகிய நடனம்  போல இருந்தது . உடலை படகு போல வளைத்து ஒரு பயிற்சி . பம்பரம் போல சுழன்று கொண்டே இருக்கும் ஒரு பயிற்சி. பள்ளி பாடங்களை பற்றி ஒருவரும் பேசி கொள்ளவே இல்லை. இங்கே வந்து பயிற்சி செய்யும் போது அவர்களின் முகத்தில் புன்னகையை பார்ப்பது அரிதாகவே இருக்கிறது. சிரிப்பு இல்லாத சிறுவர்களை கற்பனை கூட செய்ய இயலவில்லை. ஆனால் இங்கே நேரடியாக பார்த்து கொண்டிருக்கிறேன் . விளையாடினாலே  உடல் வலுவாகும் என்பது பழைய கதை ஆகி விளையாடுவதற்கே உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற இடத்தில்  வந்து நிற்கிறோம்.இன்றைய காலகட்டத்தில் விளையாட்டின் பொருள் என்ன என்பதை பற்றி ஒரு தனி கட்டுரை எழுத வேண்டும். 

வீட்டில் அனைத்து வேலைகளும் முடிந்தவுடன் தங்களுக்கான நேரமாக எடுத்துக் கொண்டு ஜிம்மிற்கு வரும் இல்லத்தரசிகள் . மனித குலம் ஒன்றாக  கூடி வாழ ஆரம்பித்த காலம் தொட்டு இன்று வரை இல்லதரசிகளின் பேசுபொருட்கள் மாறவே இல்லை என்பதை அவர்களின் உரையாடலை கேட்ட போது புரிந்து கொண்டேன். நானும் அவர்களின் வயதில் இப்படி மாறி  விடுவேனோ என்ற பயம் வரத்தான் செய்தது. 

எதற்காக ஜிம் வர ஆரம்பித்தீர்கள் என்பதற்கு கோச்கள் ஒரே மாதிரி பதிலை கொடுக்கிறார்கள். 

சும்மா பரீட்சை லீவில் நண்பர்களோடு ஜிம் வந்தேன். உடல் பயிற்சி கூடத்தில்  இருப்பது நன்றாக இருப்பது போல் தோன்றியது. இதை விட்டு வெளியே சென்றாலும் எதுவும் பிடிக்கவில்லை. அதனால் இதையே வேலையாக மாற்றிக் கொண்டேன் என்ற பதிலே பெரும்பாலும் வருகிறது. அவர்கள் கூறும் பதிலின் ஆழத்தை உணர்ந்திராதவர்களாகவே இருக்கிறார்கள். தனக்கான பாதை என்னவென்பதை பெரும் சிந்தனைகளிலும் , தத்துவ , அறச்சிக்கல்களிலும்  அலைக்கழியாமல்  அறிந்தவர்கள் நல்லூழ் கொண்டவர்கள் என்றே எண்ணினேன். கொஞ்சம் பொறாமையாக கூட இருந்தது. 

நான் பிறரிடம் ஜிம் பற்றிய அவர்களின் அனுபவத்தை கேட்டு கொண்டிருந்ததை அறிந்து கொண்ட மற்றுமொரு கோச் நான் அவரிடம் பேச சென்ற பொழுது , நான் இங்க சும்மா தண்ணி கேன் போட வந்தேன் எனக்கும் ஜிம்மிற்கும் சம்பந்தமே இல்லை என்று தப்பி சென்றார் . பிறகு ஒருமுறை அவர் கோச் ஆன காரணத்தை கூறிய போது , தான் ஒரு சாடிஸ்ட் எனவும் மற்றவர்களை பளு தூக்க வைத்து வருத்தி பார்ப்பது தனக்கு மகிழ்ச்சி கொடுப்பதாகவும் கூறி சிரித்தார் . யோசித்து பார்த்தால் தன்னை தானே வருத்தி உடல் பலத்தை ஏற்றுவது ஜிம் பிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பதாக உள்ளது என்பது புரிந்தது .  

ஜிம் ஓனர்   " இந்தப் பகுதியில் யாருமே மருத்துவமனைக்கு செல்லாமல் பார்த்துக்கொள் ! அதற்காகவே‌ நீ  உடற்பயிற்சி கூடத்தை துவங்க வேண்டும்! " என்ற தன் ஆசான்  கூறிய வார்த்தைகளை மனதில் கொண்டே ஆரம்பித்ததாக கூறினார். முப்பது வருடங்களுக்கு முன்பு 90-களில் ஜிம்மிற்கு வருபவர்கள் ஒருவரோடு ஒருவர் உரையாடியபடியும் , ட்ரெயினர் சொல்வதை கேட்டும் உடற்பலத்தை அதிகரித்து கொண்டார்கள். தற்போது வருபவர்கள் காதில் ஹெட்செட் உடனும், கையில் மொபைல் ஆப் பார்த்து உடற்பயிற்சி செய்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்ற சிறு வருத்தம் உள்ளது என்றார்.  உங்களுடைய பிட்னெஸ்யை  பற்றிய உங்கள் நண்பர்கள்  என்ன கூறுகிறார்கள் என்று கேட்டேன் . நண்பர்களை சந்திப்பதையே தவிர்க்கிறேன் . முடி  நரைத்த தலைகளும், தொப்பையோடு கூடிய கனத்த உடலும், பிளட் பிரஷர், சுகர் என்ற பிரச்சினைகளோடும் , வீடு வாங்கியாச்சா, என்று கேள்விகளோடுமே எதிர் கொள்கிறார்கள். சாலையில் அவர்களை பார்த்தாலே நான் வேறு ரூட்டில் சென்று மறைந்து விடுவேன் என்றார்.அவர்களை பார்த்தால் என்னுடைய வயதை நானே நேர் கொண்டு பார்க்கும் பயத்தை கொடுக்கிறது என்று மெலிதான பயமும், சிரிப்பும் கலந்த புன்னகையை தந்தார். 

ஒன்றாக பயணத்தை மேற்கொள்பவர்கள் எல்லாம் ஒரே இடத்தை அடைவதில்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர்க்கான மெய்மையை அறியும் வழியாகவே வாழ்க்கை இருக்கிறது. ஒரு சிலர் மிக இயல்பாக அடைந்து விடுகிறார்கள். ஆனால் அறிந்தோம் என்ற அறிவில் இருப்பதில்லை. அதனாலேயே அறிவிலிருந்தும் விடுதலையை பெறுகிறார்கள் என்று தோன்றியது.

பாடி பில்டிங் செய்வதால் என்ன பயன் ? பார்க்க நன்றாக இருக்கிறது. அதனால் ஒரு தன்னம்பிக்கை வருகிறது. உடல் பலம் கூடுகிறது.‌அதை வைத்து? எங்கள் பொள்ளாச்சி தோட்டத்தில் தென்னைமரம் ஏறுபவர்களை சிறுவயதில் கவனித்திருக்கிறேன். வயிறெல்லாம் ஒட்டிப் போய் உடலில் சதைப்பிடிப்பே இல்லாமல் இருப்பார்கள். அறுபது அடி உயர தென்னை மரத்தில் வெறுமனே கால்களுக்கு மட்டும் தென்னை நாரினால் முறுக்கி பின்னப்பட்ட ஒரு நீள் வலையை மாட்டிக் கொண்டு தங்களுடைய உடலின் கனத்தை தாங்களே சுமந்து கொண்டு ஏறுவார்கள். அவர்களுக்கு சாப்பாடு கிடைக்காததால் தான் இப்படி இருக்கிறார்கள் என்று எண்ணினேன். பள்ளிக்கு செல்ல ஆரம்பித்த பிறகு சினிமா படங்களில் கதாநாயகர்கள் சிக்ஸ் பேக் வைப்பதை தெரிந்து கொண்டேன். தென்னை மரமேறிகளின்  உடல் அமைப்பு தான் சிக்ஸ் பேக் என்று தெரிய வந்த போது அதிர்ச்சியாகவே இருந்தது .எந்த வித உடற்பயிற்சியும் இல்லாமல் தன்னுடைய வாழ்க்கைக்காக உருவான உடம்பிற்கும் , வெறுமனே காட்சிக்காக உருவாக்கப்படும் உடம்பிற்கும் உள்ள பயன்மதிப்பை பற்றிய குழப்பம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது எனக்கு. 
 
என்னுடைய கணவரும் பாடி பில்ட் செய்ய வேண்டும் என்றே ஜிம் சேர்ந்துள்ளார். அவருக்கான பயிற்சிகளை உடனிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு பயிற்சியின் போதும் உடலில் ஒவ்வொரு இடத்தில் வலி தெரிய வேண்டும். சரியான இடத்தில் வலித்தால் தான் அந்த இடம் பலம் கூடும். பாடி பில்டிங் செய்வதும் தியானம் போலத்தான். நம்முடைய விழிப்புணர்வை குறிப்பிட்ட இடத்தில் கொண்டு செல்ல வேண்டும். அப்போது தான் அதனுடைய இருப்பை உணர முடியும். இருப்பின் ஆற்றலே உடலை வலிமையாக்குகிறது. Energy follows awareness.  பாடி பில்டிங் செய்ய வேண்டுமென்றால் வெறுமனே உடற்பயிற்சி மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. அதற்கான சரியான நேரத்தில் உணவு . எட்டு மணி நேர தூக்கம். இவையெல்லாம் அமைய வேண்டுமென்றால் தேவையில்லாமல் நேரத்தை வீணாக்க முடியாது.  தனிமனித ஒழுக்கத்தையே ஜிம் கற்றுக் கொடுக்கிறது. தன்னுடலை தானே கவனிக்கும் திறனை தருகிறது.மனிதனுக்கு ஏதேனும் ஒரு துறையில் ஒழுக்கம் கை கூடினால் போதும். அவன் ஒட்டு மொத்த வாழ்க்கையும் மாறிவிடுகிறது. 

பிள்ளையார் முன் கூட தோப்புக்கரணம் போடாத என்னை , ஸ்குவாட் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தும் ஜிம். ஒரு சமூகத்தின் குறுக்கு வெட்டு தோற்றத்தை பார்ப்பதற்கு சரியான இடம். பத்து கிலோ டம்பெல்ஸ் ஐ இரண்டு கைகளிலும் தூக்கி கொண்டு ஐந்து 
படிக்கட்டுகளில் ஏறி இறங்கியபடி பயிற்சி செய்து கொண்டிருந்த ஒருவர், ஜிம்மில் தண்ணி கேன் போட முப்பது படிக்கட்டுகள் ஏறி வந்த ஒருவருக்கு வழி விட்டு நிற்கும் முரணை எப்படி கையாள்வது என்று தெரியவில்லை. புன்னகைத்து என்னுடன் விளையாடு என்று கைநீட்டுகின்ற குழந்தைகளாகும் மெசின்கள். முகத்தை உம்மென்று வைத்து காதில் அதிக சத்தத்தை கொடுத்து எதையும் கேட்காத, உணராத மெசின்களாகும் மனிதர்கள் என ஜிம் ஒரு தனித்த உலகம் .

Manobharathi Vigneshwar
Raja annamalai puram

04-08-2024