Skip to main content

Posts

பூங்கா வாசகம்....

         இன்று பூங்காவில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த போது சுவரில் எழுதப்பட்டிருந்த வாசகங்களை படித்துக் கொண்டே நடந்தேன்.  அதில் சீராக சிந்தனை செய் , விரைவாக செயல்படு என்ற வாசகம் சிறு வெளிச்சம் போல அறுபட்ட எண்ணங்களை இல்லாமலாக்கியது. என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான் ? நடந்து கொண்டிருக்கிறேன். பூங்காவில் இருக்கும் நபர்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன். சுவரில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களை படித்துக் கொண்டிருக்கிறேன். மனதில் பலவகையான எண்ணங்களை தொடர்பில்லாமல் தொடர்புபடுத்திக் கொண்டிருக்கிறேன். இதில் நான் எங்கே இருக்கிறேன்? இதுவரைக்கும் எண்ணங்கள் தான் சிந்தனைகள் என்று நினைத்திருந்தேன். ஒரு எண்ணத்தில் இருந்து இன்னொரு எண்ணத்திற்கு மனம் தாவிச் செல்கிறது. இதை நான் ஏதோ ஒரு அதிமேதாவித்தனம் என்று தான் நம்பியிருக்கிறேன். ஆனால் இந்த வாசகம் அதை ஒரு குப்பை கூடம் என கூறிவிட்டது. Sakamoto என்ற ஒரு ஜப்பானிய கார்ட்டூன் சீரிஸ் ஒன்றை  விக்னேஷ்வர் பார்த்து வருகிறார். வன்முறை சார்ந்தது தான். ஆனால் அதில் சில நல்ல எபிசோடுகள் வரும் போது என்னை பார்க்க சொல்வார். அதில் வரும் நாயக...
Recent posts

பக்கத்து வீட்டுக்காரம்மாவின் பாத்திரம்.....

  நாம் புழங்கும் பொருட்கள் நம்முடைய முகமாகவே மாறி விடுவதன் மாயத்தை எண்ணி புன்னகை வந்தது. பக்கத்து வீட்டுக்காரம்மா பலகாரம் கொடுத்து விட்ட பாத்திரம் நம் வீட்டில் அந்நியமாகவே தெரிவது எப்படி ? வீட்டின் பாத்திரங்கள் அதை ஏற்றுக் கொள்வதேயில்லை. நான் எப்போது வீட்டுக்கு செல்வேன்? என்று ஏக்கத்துடனும் , பரிதவிப்புடனும் இருக்கும் பால்வாடி குழந்தையை போல இருக்கிறது அது.  அதை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றால் அதில் நானும் ஏதேனும் பலகாரத்தை போட்டு தான் கொடுக்க வேண்டும்.  இரும்பு வடசட்டியை எடுக்கும் போதெல்லாம் பெரியம்மாவின் சாயல் தெரிகிறது. கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக என் அம்மா அதை பயன்படுத்தி வந்திருந்தாலும் அம்மாவின் சாயலை அதில் நான் ஒரு போதும் கண்டதில்லை.  அம்மாவிற்கு பெரியம்மா கொடுத்த நல்ல கனமான இரும்பு வடசட்டி. திருமணத்துக்கு பிறகு அம்மாவின் வீட்டுக்கு சென்ற போது யாருக்கும் தெரியாமல் சூட்கேசில் வைத்து தூக்கி கொண்டு வந்தேன். பெரியம்மா எனக்காகவே அம்மாவிடம் கொடுத்தாள் என்று எண்ணுகிறேன்.  வடசட்டி சூடாக ஆரம்பித்தது . நிலக்கடலையை எடுத்து போட்டேன். தீயை மிதமாக வைத்தேன். முதலில...

மணிமங்கலம்....

 மணிமங்கலத்தில் தான் பரீட்சை என்றார் விக்னேஷ்வர். உடனடியாக அதன் வரலாறு தான் நினைவிற்கு வந்தது.  சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி படையெடுத்து வந்த போது மணிமங்கலத்தில் வைத்து தான் அவனை விரட்டி அடித்திருக்கிறார் முதலாம் நரசிம்மவர்மன். வரலாற்று சிறப்பு மிக்க இடம்.மணிமங்கலத்திற்கு லோகமகாதேவி சதுர்வேதி மங்கலம் என்பது இராஜராஜன் ( மனைவி ) காலப் பெயர். கைலாசநாதர் கற்றளி, பெருமாள் கற்றளி என ஆலயங்களும் இருக்கின்றது. அதையெல்லாம் பார்த்துவிட வேண்டும் என உடன் சென்றேன்.  விக்னேஷ்வர் பரீட்சை எழுத உள்ளே செல்ல நான் அந்த கல்லூரியின் கட்டிடங்களை சுற்றி வந்து கொண்டிருந்தேன்.  கல்லூரியில் தோட்ட வேலைக்கு வரும் பெண்களிடம் பேச்சு கொடுத்தேன்.  நான் என்னுடைய சிறுவயதில் எங்களூரில் பார்த்தவர்களை போலவே இருந்தார்கள். முகப்பருக்கள் இல்லாத  வெயில்பட்ட கருத்த சருமம். இப்போது எங்களூரில் யாரையும் நான் அப்படி பார்க்கவில்லை. அடுத்தடுத்த தலைமுறைகளில் நிறம் மாறிக் கொண்டே செல்கிறார்கள். எங்களூரில் இப்போது  மாநிறத்திலிருந்து சிவப்பு நிறம் வரை என மட்டுமே இருக்கிறார்கள். வெயில் பட்ட மினுக்கும்...

தாழ்வாரத்து நிழல்

           மாமரத்து கிளைகளும், இலைகளும் தாழ்வாரத்து  நிழலுடன் பொறுமையாக நகர்ந்து அமைதியாக  தங்களுடைய  இருப்பிடத்தை ஆக்கிரமித்து கொண்டிருந்தன. நிழல்கள் சில சமயங்களில் தாவி வரும் முயல்களை போல நிலத்தை ஆக்கிரமிக்கின்றன. சில சமயங்களில் மெதுவாக  நகரும் ஆமைகளை போல. சில சமயங்களில் காலை மிருதுவாக வருடி கொடுக்கும் வாய்க்கால்  நீரின்  சிற்றலைகள் போல.மற்றும் சில சமயங்களில் அசை போடும் மாட்டை போல.  கோலம் போட்டிருக்கும் போது விழும் நிழல், ஆற்றில் சிறு பாறைகளின் மீது கால் வைத்து நடக்கும் இளம் பெண்களை போல சிலிர்ப்புடனும், சிரிப்புடனும் நகர்கின்றன.பூஜைக்கான பித்தளை சாமான்களை கழுவி கவிழ்த்திருக்கும் போது அதில் முகம் காட்டி  அழகு பார்த்துக் கொள்கின்றன.  விக்னேஷ்வர்  செய்தித்தாள்  படிக்கும் போது   தாழ்வாரத்து நிழலும் உடன் படிக்கிறது. அப்போது அவை இருக்கின்றனவா இல்லையா எனும் படி அவருடன்  ஒன்று கலந்து விடுகின்றன.நான் துணி காய போடும் போது கண்ணாமூச்சி விளையாடுகின்றன நிழல்கள் .  நாங்கள் இருவரும் அமர்ந்து ...

கார்த்திகை தீபம் .....

                நூலகத்திலிருந்து வீட்டுக்கு வருவதற்கே மணி 4.20 ஆகியது. வீட்டுக்கு வந்ததுதும் உடனடியாக பாத்திரங்களை கழுவி வைத்தேன். அடுத்து அடை மாவு அரைத்தேன்.இனிப்பு பணியாரம் செய்வதற்கான மாவு அரைத்தேன். அரிசி கொஞ்சம் ஊற வைத்து, காலையிலேயே ஊறவைத்து விட்டு போன அனைத்து பருப்பு வகைகளுடன் சேர்த்து ஒரு கலவை சாதம்  செய்தேன். இன்னுமும் பொரி உருண்டையையும், நிலக்கடலை உருண்டையும் செய்ய வேண்டும். அடை செய்வதற்கும், இனிப்பு பணியாரம் செய்வதற்கும் தேங்காய் வேண்டும். அதை உடைக்க வேண்டும். மணி 6 ஆகியிருந்தது. இன்னுமும் விக்னேஷ்வர்  வீட்டுக்கு வரவில்லை. நான் வீட்டை கூட்டி முடித்தேன்.  விக்னேஷ்வர்  வந்து விட்டார். உடனடியாக தேங்காய் உடைத்து, பருப்பு ஆடை மாவிலும், இனிப்பு பணியாரத்தில் போட்டேன். விக்னேஷ்வரை நிலக்கடலையை தோல் நீக்க சொல்லிவிட்டு, நான் சமைப்பதில் மும்முரமாக இருந்தேன். இனிப்பு பணியாரம் ஊற்றி முடித்ததும், அடை மாவிலும் பணியாரத்தையே செய்தேன். ஊற வைத்த கடலை பருப்பை வேக வைத்து கொஞ்சம் வெல்லம்  சேர்த்து லட்டு பிடித்தேன்....